திங்களைப் பாம்பு விழுங்கியது
பண்டைய தமிழர்கள் கலைகள் பண்பட்டில் மட்டுமல்ல விண் வெளி அறிவியலிலும் சிறந்து விளங்கினர். இந்தக்
கூற்றை முன் வைக்க பலரும் கோவிலில் உள்ள ஒன்பது
கோள்களையும் அமாவாசை நிகழ்வினைச் சான்றாக முன்வைப்பர். ஆனால் நான் இதை புதிய
சில விளக்கங்களோடு உங்களுக்கு விளக்க ஆவல் கொள்கிறேன்.
திருமால் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பதாக
நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே கூறி வருகின்றனர். பாற்கடல் என்ற
கடல் ஒன்று உள்ளதா ? பாற்கடல் என்பதைப் பிரித்தால் பால் + கடல் என்று பொருள் வரும்.
பால் கடலில் திருமால் உறங்கிக் கொண்டு இருக்கின்றாறே? வீட்டில் வைக்கின்ற பாலே கெட்டு
விடுகிறது. பால் கடல் கெட்டு, மோராகி தயிராகிவிடாதா ? அது வாடையடிக்காதா என்று இன்றைய
வாண்டுகளே கேள்விகளுக்கு மேல் கேள்விகளை அடுக்கி விடுவார்கள். நமக்கு அது பற்றிக் கேள்விகள் எழாதா ?
பாற்கடல் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து
பார்க்கவேண்டும், பால் கடல் ஒன்று இருக்குமா
? இதை இவ்வாறு பொருள் கொள்ளாது. அண்டத்தில்
உள்ள பால்வெளிகளைப் பற்றி இங்கே ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வோம். அண்ட சராசரத்தில் எண்ணற்ற பல்வெளிகள் உள்ளதாக இன்றைய அறிவியல்
உலகம் கூறுகிறது. பாற்கடல் என்ற சொற்களையும் இந்த அறிவியல் செய்தியினையும் ஒப்பு நோக்குக..
அறிவியல் பால் வெளிகள், எண்ணற்றது என்கிறது. அதை நம் முன்னோர்கள் கடல் என்கின்றனர்.
ஆகவே அண்டத்தில் உள்ள கடல் போன்று பரவி இருக்கின்ற
பால் வெளிகளுக்கு இடையே திருமால் பாம்பு படுக்கையிலே படுத்திருப்பதாக நம் முன்னோர்கள்
நுணுக்கமாக பால்வெளியைப்பற்றி நமக்குத் தகவல்களைத் தருகின்றனர். இன்று அறிவியல் உலகம்
கண்டு பிடித்துக் கூறிய உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் கண்டறிந்து
கூறுவதிலிருந்து தமிழர்கள் விண்வெளி அறிவியலில்
முன்னோடியாக இருந்ததை நம்மால் அறிய முடிகின்றது.
இதற்கே வியந்தால் எப்படி வள்ளுவர் கூறும்
செய்தியினை நீங்கள் அறிந்தால் இன்னும் வியப்பின் உச்சத்திற்குச் செல்வீர்கள். என்னது வள்ளுவர் விண்வெளியைப் பற்றிக் கூறியுள்ளாரா ? என்ற
கேள்வியுடனே பின் வரும் ஆய்வினைப் படியுங்கள்.
உங்களுடையசிறு வயதில் கேட்ட கதைகளைக் கொஞ்சம் நினைவு
படுத்திப் பாருங்கள். சந்திர கிரகணம் நிகழ்ந்தாலோ
சூரிய கிரகணம் நிகழ்ந்தாலோ சந்திரன் , சூரியனைப் பாம்பு விழுங்குவாதால்தான்
, சந்திர , சூரிய கிரகணங்கள் நிகழ்வதாகப் பாட்டி கூறிய கதைகள் நினைவுக்கு வருகிறதா
?. இதே செய்தியினைப் பொய்யா மொழிப் புலவன் வள்ளுன் தான் அருளிய , உலகப் பொதுமறையாம்
திருக்குறள் காமத்துப்பாலில், ¸அலரறிவுறுத்தல் என்னும் அதிகாரத்தில்
1146 வது குறளில் பதிவு செய்கிறார். அது என்னவென்பதை முதலில் குறளைக் கண்டு
பின்னர் விளக்கத்தைக் காண்போம் .
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (குறள்-
1146)
இந்த
குறளில் வள்ளுவர் ஒரு செய்தி பரவும் முறையினை
விளக்குவதற்காக, விஞ்ஞன செய்தி ஒன்றை உவமைப் படுத்துகிறார். அதாவது தலைவனும் தலைவியும்
சந்தித்துப் பேசிய தகவலானது, ஊர் முழுவதும்
பரவுகிறது. அது எவ்வாறு பரவுகிறது என்றால், வானிலே சந்திர கிரகணம் நிகழும் செய்தி மக்களிடம்
பரவியதைப்போல மிக வேகமாகப் பரவியதாக் கூறுகிறார்.
இங்கே
வள்ளுவர் சந்திர கிரகணம் நிகழ்வதைச் சுட்ட கையாண்ட சொற்களை நுணுக்கமாக ஆராய வேண்டும். அதாவது சந்திர கிரகண நிகழ்வை
, தாத்தா பாட்டிகள் நமக்குக் கூறிய கதையினைப்
போலவே வள்ளுவர் திருக்குறளில் பதிவு செய்கிறார். திங்களைப் பாம்பு
கொண்டது போல என்ற சொல்லாட்சியை வள்ளுவர் கையாளுகிறார். இதன் பொருள் யாதெனில் திங்களான
நிலவைப் பாம்பு விழுங்குவதைப் போல என்பதாகும்.
தலைவனும் தலைவியும் சந்தித்து பேசிய செய்தியானது ஊர் முழுவதும்
பரவுகிறது. இதற்கு இலக்கியப் பெயர் அலர் என்பதாகும். இந்த தகவல் எவ்வாறு பரவியது என்றால்
? பாம்பு நிலவை விழுங்கும் செய்தியைப் போல விரைவாகப் பரவியது. என்று வள்ளுவர் தம் குறளிலே
கூறுகிறார். இந்த குறளை வைத்து ஆராய்ந்து பார்க்கையில் அன்றைய நாளில் சந்திர, சூரிய கிரகணங்கள் நிகழ்வதைப் பெரிய பாம்பு ஒன்று நிலவையும் சூரியனையும் விழுங்குவதால்தான்
ஏற்படுகிறது, என்பது பண்டைய தமிழர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. அதை தான் அருளிய
திருக்குறளில் வள்ளுவர் கவனமாகப் பதிவு செய்துள்ளார். இந்த குறளை நுணுக்கமாக ஆராய்ந்து
பார்த்தோமெனில் சந்திர,சூரிய கிரகணங்கள் நிகழ்வதை முன் கூட்டியே அறிந்து அதை மக்களிடம்
கூறும் வழக்கம் இருந்துள்ளது என்பதும் புலனாகிறது.
இந்த கூற்றின் வாயிலாகப் பண்டைய தமிழர்கள்
எந்த விதமான தொழில் நுட்ப கருவிகள் இன்றி விண்வெளியை
ஆராய்வதிலும் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை அறியமுடிகிறது.
Comments
Post a Comment