தஞ்சை இரகசியம்





சிதம்பர இரகசியத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருக்கிறோம், அதென்ன தஞ்சை இரகசியம் ? என்று  உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இல்லை. கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட அக்கோவிலைப் பற்றி எண்ணற்ற கேள்விகளும் மர்மங்களும்,  இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தஞ்சைக்குச் சென்று பல முறை ஆராய்து, ஆய்வாளர்களின் ஆய்வுகளை எல்லாம் கூர்ந்து அறிந்த பின்னரே அவை எல்லாம் உண்மைகளா இல்லை கட்டுக் கதைகளா என்பதை விளக்க இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

தஞ்சை பெரிய கோவில் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோபுரத்தின் நிழல் கீழே விழாது, விமானத்தின் உச்சியில் ஒரே கல்லால் ஆன 80டன் எடையுள்ள சிகரம், ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் நந்தி. ஆனால் உண்மை அதுவல்லஇவை எல்லாம் காலம் காலமாக மக்களிடம் பரவி வந்த வதந்திகளாகும். தஞ்சை பெரிய கோவிலின் கோபு ரத்தின் நிழல் கீழே விழும். இதனை நண்பகல் வேளையில் கோவிலுக்குச் சென்று நீங்களே கண்ணால் பார்க்கலாம். கோபுரத்தின் உச்சியில் இருக்கின்ற சிகரமானது ஒரே கல்லால் ஆானது அல்ல. அது பல துண்டு கற்களைக் கொண்டு வடிவமைக்ப்பட்டது. அதே போல் கோவிலில் இருக்கின்ற நந்தியும் வளர்வது இல்லை. அது ஒரே நிலையில் தான் இருக்கிறது



விமானத்தின் சிகரம்
பன்னெடுங்காலமாக தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது யார் என்றே தெரியாமல் இருந்து வந்தது. ஹுல்ஸ் என்கின்ற ஜெர்மன் அறிஞர்தான்  கோவிலில் உள்ள கல்வெட்டுகளை எல்லாம் ஆராய்ந்து கோவிலைக் கட்டியது இராஜராஜ சோழன் என்பதை அறிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தா மலையில் இருந்து கற்களை வெட்டிக் கொண்டு வரப்பட்டு இக்கோவிலைக் கட்டினர். மலையில் இருக்கின்ற பாறைகளில் சீரிய இடைவெளியில் துளைகள் இட்டு, அத்துளைகளில் மரஆப்புகளை வைத்து அடிக்க அடிக்க பறைகள் பிளவுபடும், அவ்வாறு பிளவுப்பட்ட பாறைகளைப் பனைமரத்துண்டுகளை அடியில் வைத்து யானைகளின் உதவியோடு தஞ்சை கொண்டுவரப்பட்டுக் கோவில் கட்டப்பட்டது.



                                                                           நார்த்தாமலை
கற்கள் வெட்டப்பட்ட முறை
இராஜராஜனின் ஆணைக்கினங்க இக்கோவிலைக் குஞ்சரமல்ல பெருந்தச்சன் என்பவர் வடிவமைத்துக் கட்டினார். குஞ்சர மல்லரின் கீழ் நித்தவினோத பெருந்தச்சன், லத்தி சடையன் ஆகிய இருவரும் இக்கோவிலைக் கட்டுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
மிக பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐந்தடி ஆழ அளவுதான் அடிதளம் போடப்பட்டுள்ளது. இக்கோவிலின் இராஜபோபுரங்களும் , கோவிலின் விமானமும், திருச்சுற்று மதில்களும், வடக்குப் பகுதியில் இருக்கின்ற சண்டிகேஸ்வரர் கோவில் ஆகியவைகள் தான் இராஜராஜன் காலத்தியது. மற்றதெல்லம் பிறகாலத்தைச் சேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் இராஜராஜன் காலத்தில் இராஜராஜேச்சரம் என்று வழங்கப்பட்டு வந்தது. சரபோஜி காலத்தில் தான் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று வழங்கப்பட்டது.




                               நாயக்கர் காலத்தில் வைக்கப்பட்ட நந்தி

  
கோவிலில் இருக்கின்ற நந்தியும் நந்தி மண்டபமும் இராஜராஜன் கட்டியது அல்ல. அது நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. இராஜராஜன் காலத்தில் வைக்கப்பட்ட நந்தி இன்று தென் பகுதியில் இருக்கின்ற திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டிருக்கிறது.


கருவூர்த்தேவர் இராஜராஜன் என்று அடையாளம் காணப்பட்ட சனகதி முனிவர்களின் ஓவியம்




                                  விமானத்தின் உட்பகுதி

கோவிலின் விமானம் கூம்பு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்புறம் வெற்றிடமாக இருக்கிறது. இது சிவபெருமானின் ஆகாய தத்துவத்தை விளக்குவதக உள்ளது. மற்றும் இவ்விமனத்தின் முதல் தளத்தில் சோழர்கால ஓவியங்கள் உள்ளன. அதில் இருக்கும் இரண்டு ஓவியங்கள் கருவூர்த்தேவர், இராஜராஜன் என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால் அது கருவூர்த்தேவரும் இராஜராஜனும் அல்ல அது சனகதி முனிவர்களாவார்கள். இரண்டாம் தளத்தில் சிவபெருமானின் 108 கரணங்களில் 81 கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற கரணங்கள் செதுக்குவதற்கு கற்களும் பதியப்பட்டுள்ள ஆனால் என்ன காரணத்தினாலோ அவை முழுமையடையாமல் உள்ளன.


            இரண்டாம் தளத்திலிருக்கும் சிவபெருமானின் 81 கரணசிற்பங்கள்

இக்கோவிலில் லிங்க பாணத்தை நிறுவ முடியாமல் போனதென்றும், பிறகு கருவூர்த்தேவர் வந்து எச்சில் துப்பியதாலே லிங்த்தினை நிறுவ முடிந்தது என்றும் ஒரு கதையினைக் கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. லிங்க பாணத்தினை நிறுவுவதற்கு மூலிகை சாந்துகள் அரைத்து உற்றப்பட்ட போது மூலிகை சாந்து இறுகவில்லை. எனவே லிங்க பாணத்தை நிறுவ முடியவில்லைமூலிகை சாந்துகளை அரைத்தபோது சில மூலிகை இலைகள் கிடைக்காமல் போனது, எஞ்சிய மூலிகை இலைகளைக் கருவூர் சித்தர் கொண்டு வந்து  கொடுத்தார். இந்நிகழ்வுதான் திரித்துக் கூறப்படுகிறது. எஞ்சிய இலையை எச்சில் என்று திரித்துக் கூறுகிறார்கள் என்பது எம் கருத்து.

இராஜராஜ சோழன் கோவிலுக்கு வந்து செல்வதற்கு என்று தனி வழி இருந்தது. அது அணுக்கன் திருவாயில் என்று அழைக்கப்பட்டது. கோவிலின் வடக்குப் பகுதியில் இன்றும் அந்த வழி இருக்கின்றது.


                        இராஜராஜன் பயன்படுத்திய அணுக்கன் திருவாயில்

                    அணுக்கன் திருவாயிலில் எம் மாணவர்களுக்கு யாம் விளக்கம் தருகின்ற போது

இராஜராஜன் காலத்தில்தஞ்சை பெரிய கோவில் கோபுரம் முழுவதும் பொன்னால் வேயப்பட்டிருந்தது. பிற்காலத்தில் அந்நியர்களின் படையெடுப்பில் அவை கொள்ளை போனதுமாலிக் கபூர் படையெடுப்பில் கோவிலின் மண்டபம் சேதமடைந்தது. நாயக்கர் காலத்தில் அவை மறு சீரமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது திருமாளிகைச் சுற்று இரண்ட அடுக்காக இருந்திருக்க வேண்டும். அவை மாலிக் கபூரின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுள்ளது. இன்றும் திருச்சுற்று மாளிகையின் மேற்பகுதியில் மழை நீா் வெளியேம் வகையில் கற்குழாய்கள் உள்ளன.

திருச்சுற்று மாளிகையின் இரண்டாம் தளத்திளிருந்து மழைநீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட கற்றோணி

இராஜராஜன் ஆணைக்கேற்ப அவனது சேனாதிபதி கிருஷ்ணராமன் தன் சொந்தசெலவில் இக்கோவிலைச்சுற்றித் திருச்சுற்றி மாளிகை அமைத்தார். இராஜராஜன், கிருஷ்ணராமனுக்கு இட்ட ஆணை கோவிலின் மேற்குப் பகுதியில் இருக்கின்ற திருச்சுற்று மாளிகையின் தூணில் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ளது.


 இராஜராஜனின் அணைக்கேற்ப அநிருத்ர பிரம்மராயன் கட்டிய திருச்சுற்று மாளிகை


இராஜராஜன் அநிருத்ர பிரம்மராயனுக்கு இட்ட ஆணை கல்வெட்டாக

            கோவிலைப் பராமரிக்க 400 தளிச்சேரி பெண்கள் இருந்தார்கள். அவர்கள் கோவிலைப் பராமரித்து, விழாக்களின்போதும், காலை,மாலை வேளைகளிலும் நடனமாடி வந்தார்கள். அது மட்டுமல்லாது இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் இவர்களை மாதிரியாகக் கொண்டுதான் செதுக்கப்பட்டுள்ளன. இராஜராஜ சோழன் இவர்களுக்குக் கோவிலை ஒட்டி 400 வீடுகளோடு பல நிவந்தங்களையும் அளித்தான். இவர்களோடு இசைக்கருவிகளை இசைப்பவர்களுக்கும், தேவார திருப்பதிகங்களை ஓதும் ஓதுவார்களுக்கும் நிவந்தங்களை அளித்தான். இதற்குக் கல்வெட்டு சான்றுகள் உள்ளன.


            தளிச்சேரி பெண்களுக்கு இராஜராஜன் வழங்கிய நிவந்தங்கள் குறித்த                கல்வெட்டு
            
       இக்கோவிலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் துவாரபாலகர் சிற்பம் உலகிலே மிகப்பெரியது ஆகும். இக்கோவிலைக் கட்டுவதற்காகச் சாராபள்ளதில் இருந்து சாரம் கட்டிக் கற்களை மேலே கொண்டு சென்றார்கள் என்று கூறுவார்கள். உண்மையில் அவ்வளவு தொலைவில் இருந்து கற்களை மேலே கொண்டு செல்வது என்பது கடினமான பணியாகும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி கோவிலின் விமானத்தைச் சுற்றி மண் மேடு அமைத்து கற்களை மேலே கொண்டு சென்று கட்டியுள்ளனர். கோவிலைக் கட்டி முடித்த பின் அந்த மண் மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட மண் கோவிலைத் தண்டி சிறிது தொலைவில் கொட்டியுள்ளனர். அந்த மண் மேடு இன்று குடியிருப்புப் பகுதியாகக் காட்சியளிக்கிறது. இன்று அது செல்வம் நகர், சிவாஜிநாகர் என்றழைக்கப்படுகிறது.



                                  மண்மேடு அமைத்து கோவில் கட்டப்பட்ட முறை


           லிங்கத்தினை முதலில் இக்கோவின் கருவரையில் வைத்த பிறகுதான் விமானம் கட்டப்பட்டது. கோவிலின் வாசலை விட லிங்கம் பெரியதாக இருந்ததால் இம்முறையினை மேற் கொண்டனர். லிங்கத்தினைச் சுற்றி இருக்கின்ற ஆவுடையானது ஒரே கல்லால் ஆனது அல்ல. அது எட்டு துண்டுகளாகச் செதுக்கப்பட்டு ஒன்றிணைத்திருக்கின்றார்கள்.



                                      பெரிய கோவிலின் லிங்கம்

            விமனத்தின் வடக்குப் பகுதியில் யவனர் ஒருவரின் சிற்பம் இருக்கிறது. இராஜராஜ சோழன் ஏன் அந்த சிற்பத்தை  விமானத்தில் வடித்தான் என்று பலரும் குழம்புகின்றர். ஆனால் அது இராஜராஜ சோழன் காலத்தைச் சோ்ந்த சிற்பம் கிடையாது. அது பிறகாலத்தைச் சேர்ந்தது. சீனர்கள் மற்றும் பல கடல் தேசங்களோடு சோழ தேசத்திற்கு இருந்த தொடர்பாலும். பல யவனர்கள் சோழ தேசம் வந்து சென்று இருக்கின்றனர். அவர்களின் நினைவாக இராஜராஜ சோழனுக்குப் பின் வந்த அரசர் யாரோ ஒருவர் அச்சுதை சிற்பத்தை இடைச் சொருகலாக விமானத்தில் வடித்துள்ளார்கள்.   


                            கோவில் கோபுரத்தில் இருக்கின்ற யவன சிற்பம்


                                                             வாழ்க உடையார் ஸ்ரீஇராஜராஜ தேவர்  
                                                                      சோழம் சோழம் சோழம்



Comments

  1. செய்திகள் புதியவை
    சுவாரசியமாக இருந்தது
    நன்றி

    (நான் உங்கள் மாணவன் சு.அர்ஜூனின் அம்மா, பார்வதி )

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது.
      அன்புடன்
      ப.மதன்பாரத்

      Delete
  2. very informative and interesting sir

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிகில். தமிழனுடைய வரலற்றைத் தேடுங்கள் இன்னும் சுவாரசியமான தகவல்கள் நிறைந்திருக்கின்றது.

      Delete
  3. very informative .publish more and more articles on tanjore temple secrets, I am very eager to read it sir.congrats and keep up the good work sir

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வினீத். நீங்கள் சோழர்களுடைய வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சோழர்களைப் பற்றி இன்னும் எழுதுவேன்

    ReplyDelete
  5. sir very informative and it is intresting to know about history of tamil nadu

    ReplyDelete
  6. படித்தேன் மதன். அற்புதமான எழுத்து நடை. தஞ்சாவூர்சென்று வந்த அனுபவம்..

    ReplyDelete
  7. இன்னும் திருத்தி எழுத வேண்டும் சங்கர். நன்றி

    ReplyDelete
  8. சோழர் காலத்து எழுத்துக்களை இணையத்தில் எப்படி பெறுவது...?? எங்கு தேடியும் கிடைக்கவில்லை...! Project செய்வதற்கு தேடிக்கொண்டிருக்கிறோம்...!

    ReplyDelete
    Replies
    1. தோழா கல்லெழுத்துக்கலை என்ற நூலில், சோழர் காலத்திய உயிர் எழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்து அறிந்து கொள்ளும் வகையில் படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாங்கி படிக்கவும். கிடைக்காவிட்டால் கூறவும்.

      Delete
  9. வாழ்த்துக்கள்!

    செ.முரளி ராஜன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பின்னூட்த்திற்கு நன்றி தோழர்

      Delete

Post a Comment

Popular posts from this blog